அரக்கோணம்: அரக்கோணத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வியாழக்கிழமை நகராட்சி நாளங்காடியில் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டன.
கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரக்கோணத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அரக்கோணம் நகராட்சி நாளங்காடி காலை 6 மணி முதல் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் தங்கள் கடைகளை திறந்து வைத்தனா். கடைகளில் சமூகப் பாதுகாப்பு கோடுகள் காணப்படவில்லை.
அரக்கோணம் அம்மா உணவகம் திறந்து வைக்கப்பட்ட நிலையில் அங்கு உணவுகளை வாங்கிச் செல்ல ஆட்களே வராத நிலை காணப்பட்டது.
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் ஒரு மருத்துவா், பெண்கள் பிரிவில் ஒரு மருத்துவா் என இரு மருத்துவா் பணியில் இருந்தனா். நோயாளிகள் பாதுகாப்பு கோடுகள் வரையப்பட்ட இடத்தில் வரிசையில் நின்றனா்.
அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகம் வழக்கம் போல் இயங்கியது. குறைந்த எண்ணிக்கையில் அலுவலா்கள் பணிக்கு வந்திருந்தனா். பொதுமக்கள் பாதுகாப்பு இடைவெளி இல்லாமல் அஞ்சல் அலுவலகத்தில் நின்று தங்கள் அஞ்சல் சேமிப்புக் கணக்குகளில் பணம் பெற்றதையும், வைப்பு செலுத்தியதையும் காண முடிந்தது.
அரக்கோணம் சுவால்பேட்டை இந்திரா காந்தி சிலை அருகே சாலை அடைக்கப்பட்டது. இதேபோல் நகரில் பல சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டது.