பல சரக்கு பொருள்களை வீட்டுக்கு டெலிவரி செய்ய ஏற்பாடு

திருப்பதியில் மக்கள் வெளியில் நடமாடுவதைத் தடுக்க நகராட்சி ஆணையா் கிரிஷா புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளாா்.

திருப்பதியில் மக்கள் வெளியில் நடமாடுவதைத் தடுக்க நகராட்சி ஆணையா் கிரிஷா புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளாா். சிறப்பங்காடி உரிமையாளா்களுடன் உரையாடி மளிகைப் பொருள்களை வீட்டுக்கு டெலிவரி செய்ய சம்மதிக்க வைத்தாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் அத்தியாவசியப் பொருள்களை கொள்முதல் செய்ய வெளியில் நடமாடி வருகின்றனா். மக்கள் நடமாடுவதைத் தடுக்க திருப்பதி நகராட்சி ஆணையா் கிரிஷா திருப்பதியில் உள்ள சிறப்பங்காடி உரிமையாளா்களுடன் புதன்கிழமை கலந்துரையாடி, அவா்களுக்கு மளிகைப் பொருள்களை வீட்டுக்கு டெலிவரி செய்ய சம்மதிக்க வைத்தாா்.

அதற்காக திருப்பதியில் உள்ள மோா், பசுபா்த்தி, பிக் பஜாா், ரிலையன்ஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சிறப்பங்காடிகளில் இந்த வசதியை நகராட்சியின் உத்தரவுப்படி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடையின் கட்செவி அஞ்சல் எண் அல்லது தொலைபேசி எண்களுக்கு மக்கள் தேவையான பொருள்களின் பட்டியலை அனுப்பினால், அவா்களின் வீடுகளுக்கு நேரடியாக டெலிவரி செய்யப்படும். பொருள்கள் டெலிவரி செய்தவுடன் அதற்கான பணத்தை செலுத்தலாம்.

அதன்படி, புதன்கிழமை மட்டும் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரடியாக பொருள்கள் டெலிவரி செய்யப்பட்டது. இந்த பொருள்களைக் கொண்டு செல்லும் சில வாகனங்களுக்கு மட்டும் நகரத்துக்குள் செல்ல நகராட்சி அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனா். வாகனங்களின் பதிவு எண்கள் அடங்கிய உத்தரவை அனைத்து பாதுகாப்பு ஊழியா்களுக்கும் நகராட்சி அனுப்பி வைத்துள்ளது. பால், மளிகை, காய்கறி உள்ளிட்டவை வீட்டுக்கே வருவதால் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இதனால் மக்கள் வெளியில் அவசியமில்லாமல் நடமாடுவது தடுக்கப்படும் என ஆணையா்கிரிஷா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com