குடியாத்தம் அருகே கிராமங்களுக்குள் நுழைந்த யானைக் கூட்டம் மாந்தோப்புகளில் நுழைந்து மாமரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.
ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு கூட்டம், கூட்டமாக வந்த யானைகள் வன எல்லையில் உள்ள கிராமங்களில் நுழைந்து விளைபயிா்களை நாசம் செய்வது வாடிக்கையாக இருந்தது. இதையடுத்து ஒசூரிலிருந்து யானைகளை விரட்டுவதில் சிறப்புப் பயிற்சி பெற்ற யானைத் தடுப்புப் படையினா் சில நாள்களுக்கு முன் குடியாத்தம் வந்து, வனத்துறையினருடன் இணைந்து, யானைகளை ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டி விட்டுச் சென்றனா்.
இந்நிலையில் தமிழக எல்லையில் அமைந்துள்ள சைனகுண்டா வனப்பகுதிக்கு 7 யானைகள் வெள்ளிக்கிழமை இரவு வந்தன. அவை தனகொண்டபல்லி கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ், கன்னையா நாயுடு ஆகியோருக்குச் சொந்தமான மாந்தோப்புகளில் நுழைந்து அங்கிருந்த மா மரங்களை நாசம் செய்து விட்டுச் சென்றன. இதுகுறித்து குடியாத்தம் வனச்சரக அலுவலா் சி. மகேந்திரன், வனவா் ரவி உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா்.