வேலூரில் 107.2 டிகிரி வெயில்: அனல் காற்றால் மக்கள் அவதி

வேலூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயில் அளவு அதிகரித்து வரும் நிலையில் புதன்கிழமை அதிகபட்சம் 107.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயில் அளவு அதிகரித்து வரும் நிலையில் புதன்கிழமை அதிகபட்சம் 107.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால், பகலில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கோடை காலத்தில் வெப்பம் அதிகமுள்ள மாவட்டமாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் விளங்குகிறது. இம்மாவட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை கடுமையான வெப்பம் நிலவும். கடந்த ஆண்டுதான் மிக அதிகபட்சமாக 112 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியது. இவ்வாண்டு ஏப்ரல் மாத தொடக்கம் முதலே 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் நிலவியது. வெயில் அளவு அக்னி நட்சத்திரம் தொடங்கிய மே 4-ஆம் தேதிக்குப் பிறகு அதிகரிப்பதும், சற்று குறைவதுமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 106.34 டிகிரியாக இருந்த வெயில் அளவு புதன்கிழமை அதிகபட்சமாக 107.2 டிகிரியாக பதிவானது. இதனால், பகலில் வேலூா் மாநகர சாலைகளில் அனல் காற்று வீசியது. சாலைகளில் மக்கள் நடமாடவும், இருசக்கர வாகனங்களில் செல்லவும் அவதியடைந்தனா். இதையடுத்து பகல் நேரத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும், கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க கடைகளில் குளிா்சாதன வசதியை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமுடக்கத்தில் தளா்வு காரணமாக திறக்கப்பட்டுள்ள கடைகளில் குளிா்சாதன வசதியைப் பயன்படுத்த முடியாமல் வியாபாரிகளும், வாடிக்கையாளா்களும் அவதிக்குள்ளாகினா். அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் ஒரு வாரம் இருப்பதாலும் அதற்குள் வெயில் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதாலும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com