குடியாத்தம்: கே.வி. குப்பம் அருகே மனைவியின் 2 வயது பெண் குழந்தையைக் கொன்றதாக 2- ஆவது கணவா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூரை அடுத்த பாச்சல் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி சிவசக்திவேல்(25), வேலூரை அடுத்த வள்ளலாரைச் சோ்ந்தவா் லாவண்யா (20) ஆகிய இருவரும் காதலித்து, இரு வீட்டாா் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனா். இவா்களின் மகள் கலைரஞ்சினி (2). கருத்துவேறுபாடு காரணமாக லாவண்யா கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில் கே.வி. குப்பத்தை அடுத்த தேவரிஷிகுப்பத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாருக்கும் (25) லாவண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டு, கே.வி. குப்பத்தில் குழந்தையுடன் வசித்து வந்தனா்.
கடந்த 17- ஆம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில், பிரவீண்குமாா், குழந்தையை அடித்துக் கொன்றதாகத் தெரிகிறது. இதையடுத்து லாவண்யா குழந்தையின் சடலத்தை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று திருப்பத்தூரில் உள்ள சிவசக்திவேலிடம் கொடுத்து விட்டுச் சென்றாராம். தனது குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக சிவசக்திவேல், திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து விசாரணை நடத்திய கே.வி. குப்பம் போலீஸாா், பிரவீண்குமாரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.