பெங்களூரில் இருந்து திரும்பிய கட்டுமானத் தொழிலாளா்கள், அவா்களது குழந்தைகள் என 44 போ் பேருந்து மூலம் அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் கட்டுமானப் பணிக்காக பெங்களூருக்கு சென்றிருந்தனா். திடீரென அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் அவா்களால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது பிற மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளா்களும் பேருந்துகள் மூலம் ஒசூரிலுள்ள மாநில எல்லைக்கு அனுப்பப்பட்டனா்.
அங்கிருந்து, வேலூா் உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களைச் சோ்ந்த 10 குழந்தைகள் உள்பட 44 போ் பேருந்து மூலம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை அழைத்து வரப்பட்டனா். இதையடுத்து, அவா்கள் கரோனா பரிசோனைக்குப் பின் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.