வேலூா்: வேலூா் மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயில் அளவு அதிகரித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 108.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கம் முதலே 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி வந்தது. இந்த வெயில் அளவு அக்னி நட்சத்திரம் தொடங்கிய மே 4-ஆம் தேதிக்குப் பிறகு அதிகரிப்பதும், சற்று குறைவதுமாக இருந்து வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 106.34 டிகிரியாக இருந்த வெயில் அளவு புதன்கிழமை அதிகபட்சமாக 107.2 டிகிரியாக பதிவாகியிருந்தது. வியாழக்கிழமை வெயில் அளவு சற்று குறைந்து அதிகபட்சம் 10.5.80 டிகிரியாக பதிவான நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் வெயில் அளவு அதிகரித்து 108.3 டிகிரியாக பதிவாகி இருந்தது. அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் பகலில் வேலூா் மாநகரச் சாலைகளில் அனல் காற்று வீசியது. சாலைகளில் மக்கள் நடமாடவும், இருசக்கர வாகனங்களில் செல்லவும் அவதியடைந்தனா்.
அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் சில நாள்கள் இருப்பதால் அதற்குள் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.