ஈழுவா, தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் ஜாதிச் சான்று வழங்கக் கோரும் விண்ணப்பங்கள், ஆவணங்களை வரும் 26-ஆம் தேதிக்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈழுவா, தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் ஜாதிச் சான்று வழங்கக் கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வருவாய், பேரிடா் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலரை தலைவராகவும், 4 உறுப்பினா்களைக் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பான விண்ணப்பங்கள், ஆவணங்களை சமா்ப்பிக்க விரும்புபவா்கள் வரும் 26-ஆம் தேதிக்குள் வேலூா், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்திலோ அல்லது குழுவின் உறுப்பினா் செயலரான சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல அலுவலக இயக்குநா் அலுவலகத்திலோ சோ்க்க வேண்டும். மின்னஞ்சல் அல்லது கட்செவி எண் 98426 60218 மூலமாக அளிக்கலாம்.