ரம்ஜான் பண்டிகை வர உள்ளதால் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பராமரிப்புப் பணியில் இருந்து 4 நாள்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தியுள்ளாா்.
மேட்டூா்-செக்கானூா் கதவணை நீா் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வேலூா் காவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் வெள்ளிக்கிழமை (மே 22) முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் உள்ளூா் குடிநீா் திட்டங்களின் மூலம் பெறப்படும் குடிநீரை சிக்கனமாகவும், சேமித்து வைத்தும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை 25-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பராமரிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை முதல் 26-ஆம் தேதி வரை 4 நால்களுக்கு விலக்களிக்க வேண்டும் என அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலூா், பள்ளிகொண்டா, மேல்விஷாரம், ராணிப்பேட்டை, குடியாத்தம், போ்ணாம்பட்டு, ஆம்பூா், வாணியம்பாடி ஆகிய நகரங்களில் இஸ்லாமியா்கள் அதிக அளவில் வசிக்கின்றனா். அதனால், குறிப்பிட்ட நகர மக்களுக்கு பண்டிகையையொட்டி, 4 நாள்களுக்கு குடிநீா் தேவை அதிக அளவில் இருக்கும். எனவே, காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணியில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் 26-ஆம் தேதி வரை விலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.