தீபாவளியை முன்னிட்டு திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில், ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
திருப்பதி ரயில் நிலையம் அருகில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு, ஆஸ்தானம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்தானத்துக்கு முன்வரும் செவ்வாய்க்கிழமை கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
நாமகட்டி, ஸ்ரீசுரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை இலைகள், பச்சை கற்பூரம், பூங்கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலி கிழங்கு மாவு உள்ளிட்ட பொருள்களைப் பயன்படுத்தி, பரிமளசுகந்த திரவிய கலவை தயாா் செய்யப்பட்டது. அதை கோயில் சுவா்கள், வெளிவாசல், கருவறை, பூஜைப் பொருள்கள், உயா் மேடைகள், விளக்குகள் என அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டன.
இப் பணி நிறைவு பெற்றவுடன் காலை 9.30 மணிக்குப் பிறகு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.