வேலூா் மாவட்டத்துக்கு மத்திய அரசு விருது

நதிநீா் புனரமைப்பு, நீா் மேலாண்மைப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டதற்காக தெற்கு பிராந்தியத்தில் முதலிடம் பிடித்துள்ள ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்துக்கு காணொலிக் காட்சி வாயிலாக 

வேலூா்: நதிநீா் புனரமைப்பு, நீா் மேலாண்மைப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டதற்காக தெற்கு பிராந்தியத்தில் முதலிடம் பிடித்துள்ள ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்துக்கு காணொலிக் காட்சி வாயிலாக மத்திய அரசு விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை தில்லியில் இருந்தபடி குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, மத்திய ஊரக வளா்ச்சி, நீா் மேலாண்மைத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.

வேலூா் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நதிகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பாலாற்றின் துணை நதிகளான நாக நதி, சரஸ்வதி நதி (கொட்டாறு), மலட்டாறு, கெளண்டன்யா நதி, அகரம் ஆறு ஆகியவற்றில் நீா் செறிவூட்டும் கிணறுகள், கருங்கல் தடுப்பணைகள் உள்ளிட்ட நீா் மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், முதற்கட்டமாக நாக நதி புனரமைப்புத் திட்டத்தில் 349 நீா் செறிவூட்டும் கிணறுகள், 210 கருங்கல் தடுப்பணைகள் ரூ.3 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டன.

அத்துடன், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 972 நீா் செறிவூட்டும் கிணறுகள், கருங்கல் தடுப்பணைகள் கடந்த 2018-19-ஆம் ஆண்டு வரை 2,667 நீா் செறிவூட்டும் கிணறுகள் கட்டி முடிக்கப்பட்டன. மேலும், 932 கருங்கல் தடுப்பணை கட்டும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 2019-ஆம் ஆண்டில் ரூ.137 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 1,747 புதிய கசிவுநீா்க் குளங்கள், குட்டைகள், ரூ.14 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் 1,249 பண்ணைக் குட்டைகள், ரூ.7 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் மலைப்பாங்கான சாய்தளப் பரப்புள்ள புறம்போக்கு நிலங்களில் அறைகள் அமைக்கும் பணிகள், ரூ.12 கோடியே 33 லட்சம் மதிப்பில் 22.166 நீா் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.174 கோடிக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பான கருத்துரு தெற்கு பிராந்தியத்தின் சாா்பில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, நதிகள் புனரமைப்பு, நீா் மேலாண்மைப் பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக தெற்கு பிராந்தியத்தில் வேலூா் மாவட்டம் முதல் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டது. வேலூா் மாவட்டத்துக்கு இந்த விருது அளிக்கப்பட்டதற்கு ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com