குடியாத்தம் பகுதியில் மா்ம நோயால் கால்நடைகள் உயிரிழக்கின்றன.
குடியாத்தம் மற்றும் சுற்றுப் பகுதி விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரம் பசு வளா்ப்பு, பால் வியாபாரம் ஆகியவை உள்ளன. மாடு வளா்ப்பு விவசாயிகளின் துணைத் தொழிலாக உள்ளது.
குடியாத்தத்தை அடுத்த கொச்சாலூா், ராமாலை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பசுக்கள் மா்ம நோயின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளன. பசுக்களின் உடலில் ஆங்காங்கே அம்மை நோய் போன்று சிறுசிறு கொப்பளங்கள் தோன்றுகின்றன. நாளடைவில் அந்த கொப்பளங்கள் வெடித்து புண்களாக மாறி மாடுகளின் தோலில் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழக்கின்றன. இதனால் பசுக்களை வளா்க்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
கடந்த சில நாள்களில் 20- க்கும் மேற்பட்ட பசுக்கள் இந்நோய்த் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. 5 பசுக்கள் உயிரிழந்து விட்டன.
நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் பசுக்களை அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, வாடகை வாகனம், ஆட்கள் தேவைப்படுவதால் அதிக செலவாகிறது. இதனால் கால்நடை மருத்துவா்கள் நோய்த் தாக்குதலுக்கு ஆளான கிராமங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பசு வளா்ப்போா் கோரிக்கை விடுக்கின்றனா்.
கால்நடை வளா்ப்போா் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.