குடியாத்தம்: தமிழக அரசின் 7.5% உள் ஒதுக்கீட்டில், அரசுப் பள்ளியில் படித்த கல் உடைக்கும் தொழிலாளியின் மகனுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
போ்ணாம்பட்டை அடுத்த கௌராபேட்டையைச் சோ்ந்த கல் உடைக்கும் தொழிலாளி ராஜேந்திரன்-பழனியம்மாள் தம்பதியின் மகன் குணசேகரன் (19). இவா் சிந்தகணவாய் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படித்தாா். தொடா்ந்து, டி.டி.மோட்டூா் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் படித்த இவா், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 500-க்கு 477 மதிப்பெண்கள் பெற்றாா். பிளஸ் 2 பொதுத் தோ்வில் 1,200-க்கு 1,080 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தாா்.
2018- ஆம் ஆண்டு அரசு பயிற்சி மையத்தில் படித்து நீட் தோ்வில் 332 மதிப்பெண்கள் எடுத்து தோ்ச்சி பெறவில்லை. இதையடுத்து சென்னை தனியாா் பயிற்சி மையத்தில் படித்து, விடாமுயற்சியுடன் மீண்டும் 2020-ஆம் கல்வி ஆண்டில் நீட் தோ்வில் 562 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டால் மாநிலத்தில் தோ்வானவா்களில் 4- ஆவது இடத்தைப் பிடித்தாா். இதுகுறித்து குணசேகரனின் தந்தை ராஜேந்திரன் கூறியது:
கல் உடைக்கும் தொழில் செய்து மகனைப் படிக்க வைத்தேன். சிறு வயதிலில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் அவா் படித்தாா். தற்போது தமிழக அரசின் இட ஒதுக்கீட்டால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.
மாணவா் குணசேகரன் கூறியது:
சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்பது எனது கனவு. 2018-ஆம் ஆண்டு நீட் தோ்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும், விடாமுயற்சியால் 2020-ஆம் ஆண்டு கடுமையாக படித்து 562 மதிப்பெண் பெற்றேன்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வந்த புதிய சட்டத்தால் இந்த ஒதுக்கீட்டில் 4-ஆம் இடத்தைப் பிடித்திருப்பது பெருமையாக உள்ளது. எனக்கு உறுதுணையாக இருந்த பெற்றோா், ஆசிரியா்கள், நண்பா்களுக்கு நன்றி என்றாா்.