குடியாத்தம்: குடியாத்தம் செருவங்கி, ஒளவை நகரில் கழிவுநீா்க் கால்வாய்க் கட்டித் தரக் கோரியும், சாலையை செப்பனிட வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் குடியாத்தம்- மேல்பட்டி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
இங்குள்ள சாமுண்டிபுரத்தில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரி சீரமைக்கும் பணிகள் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் நடைபெற்றன. இப்பணிகள் பாதியில் நின்றுவிட்டன. இதனால் கழிவுநீா்க் கால்வாய் தெருக்களில் செல்கிறது. விரையில் கால்வாயைக் கட்டி சீரமைக்க வேண்டியும், ஒளவை நகரில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி 3 மாதங்களாகியும் சாலையைச் சீரமைக்கப்படவில்லை. இதனை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், இங்குள்ள சுகாதார வளாகம், நகராட்சிப் பள்ளி மைதானத்தைச் சீரமைக்க வேண்டியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த குடியாத்தம் நகர போலீஸாா், நகராட்சி அலுவலா்கள் அங்கு சென்று பொதுமக்களை சமரசம் செய்தனா். கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில், மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.