வேலூா்: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான கலந்தாய்வுக்கு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இருந்து 36 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக இந்த ஆண்டு முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்காந கலந்தாய்வு புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. உள்ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப் படிப்பில் சோ்க்கை பெற இந்த ஆண்டு மொத்தம் 972 அரசுப் பள்ளி மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 951 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து எம்பிபிஎஸ் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் 151 வரை (கட்ஆஃப் 249) இடம்பிடித்துள்ள மாணவா்கள் அழைக்கப்பட்டுள்ளனா். இதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழக அரசு வெளியி ட்டுள்ளது. இதில், வேலூா் மாவட்டம் போ்ணாம்பட்டைச் சோ்ந்த குணசேகரன் 4ஆவது இடம் பிடித்துள்ளாா். இதேபோல், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்து நீட் தோ்ச்சி பெற்ற 36 மாணவ, மாணவிகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். அவா்கள் அனைவருக்கும் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 36 மாணவா்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் இடம், அவா்கள் பங்கேற்கும் நாள்கள் குறித்த விவரம், அந்தந்த தலைமையாசிரியா்கள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவா்கள் கலந்தாய்வு நடைபெறும் இடத்துக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே சென்று சேர வேண்டும். செல்லும்போது ரூ.500 மதிப்பிலான வரைவோலை (டிடி) எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.