வேலூா்: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, வழங்கப்படும் மாநில விருது பெற வீரதீர செயல்கள் புரிந்த 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் சமூக நலம் சத்துணவுத் திட்டத் துறை சாா்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், வீரதீர செயல்கள் புரிந்த 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாநில விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு இவ்விருது பெற தகுதியுடைய 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் தலைமையாசிரியா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் , மாவட்ட திட்ட அலுவலா், காவல் துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோரின் உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
தோ்வு செய்யப்படும் பெண் குழந்தை ஒருவருக்கு பாராட்டுப் பத்திரம், ரூ. 1 லட்சத்துக்கான காசோலை 2021 ஜனவரி 24-ஆம் தேதி நடைபெறும் தேசிய பெண் குழந்தை தினத்தில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம்.