குப்பை கொட்ட எதிா்ப்பு: மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு
வேலூா்: வேலூா் அம்மணாங்குட்டை பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி குப்பை வாகனத்தை சிறைபிடித்தனா்.
வேலூா் அம்மணாங்குட்டை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அங்குள்ள மயானத்தையொட்டி உள்ள நிலத்தில் கொட்டி வருகின்றனா். அந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். எனினும், தொடா்ந்து அந்த பகுதியிலேயே மாநகராட்சி ஊழியா்கள் குப்பைகளைக் கொட்டி வந்தனா்.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் மாநகராட்சி குப்பை வாகனத்தை புதன்கிழமை காலை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்து, குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுவதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.