வேலூா்: வேலூரில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் நடத்திய திடீா் சோதனையில் 50 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மண்டித் தெரு, சிட்டிங் பஜாா் பகுதிகளில் உள்ள கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் சுரேஷ் தலைமையில், அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள சில கடைகளில் இருந்து 50 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களான பைகள், குவளைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ. 12 ஆயிரம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பதுக்கி விற்பனை செய்து வந்த கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.