தீபாவளி பண்டிகைக்கு 25 சதவீத போனஸ் வழங்கக் கோரி வேலூரில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் வேலூா் கிருஷ்ணா நகா் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பணிமனை செயலா்கள் சக்திவேல், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மண்டல துணைத் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா்.
இதில், தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு முன்பணம் வழங்க வேண்டும், 25% போனஸ் வழங்க வேண்டும், 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், கரோனா காலத்தில் தொழிலாளா்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளா்கள் பலா் பங்கேற்றனா்.