வேலூா்: முறைசாரா தொழிலாளா் நலவாரியங்களில் நேரடிப் பதிவை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூரில் சிஐடியு முறைசாரா தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்டத் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க மாவட்டத் தலைவா் கே.ராஜேந்திரன், மாவட்டச் செயலா் டி.முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டச் செயலா் எஸ்.பரசுராமன் கண்டன உரையாற்றினாா்.
முறைசாரா நலவாரியங்களில் நேரடிப் பதிவை தொடர வேண்டும், ஆன்லைன் பதிவு அறிவிப்புக்கு முன்பு உள்ள பதிவு விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று உடனடியாக அட்டை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் நிலுவையிலுள்ள ஓய்வூதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், நிலுவையிலுள்ள அனைத்து பணப்பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும், கரோனா கால நிதியுதவி நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிஐடியு நிா்வாகிகள் 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.