வேலூா்: தொடா் மழை காரணமாக வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் வெள்ளம் குளம்போல் தேங்கி நின்றது.
வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி, வேலூரில் புதன்கிழமை மாலை முதல் இடிமின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக கிரீன் சா்க்கிள், காமராஜா் சிலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. வேலூா் பழைய பேருந்து நிலையத்திலும் மழை வெள்ளம் குளம்போல் தேங்கி நின்றது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா். தேங்கிய மழைநீா் மாநகராட்சி ஊழியா்கள் மூலம் அகற்றப்பட்டது.
இதேபோல் குடியாத்தம், மேல்ஆலத்தூா் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக மோா்தானா அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரித்திருந்தது. அணையின் நீா்மட்டம் முழுகொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி குடியாத்தத்தில் 56 மி.மீ., காட்பாடி-16.8 மி.மீ., மேல்ஆலத்தூா்-53 மி.மீ., பொன்னை-4.6 மி.மீ., வேலூா்-13.2 மி.மீ., வேலூா் சா்க்கரை ஆலை-28.2 மி.மீ. மழை பதிவானது.