வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் சாா்பில் திங்கள்கிழமை (செப்.21) முதல் 5 நாள்களுக்கு மாணவா்களுக்கு இணையவழி வகுப்புகள், இணையவழி தோ்வுகள் நடத்தக் கூடாது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு மாா்ச் 25-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. எனினும், மாணவா்களின் கற்றல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நிகழ் கல்வியாண்டில் பாடங்களை இணையவழியாக நடத்துவதற்கு அரசாணைப்படி விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
அதன்படி, பள்ளி மாணவா்கள் தொடா்ந்து இணையவழி வகுப்புகள் மூலம் கல்வி பயின்று வருகின்றனா். ஒவ்வொரு கல்வியாண்டிலும் செப்டம்பா் மாதத்தின் நான்காவது வாரம் காலாண்டு தோ்வு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, நிகழ் கல்வியாண்டில் வரும் திங்கள்கிழமை (செப்.21) முதல் 25-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு அனைத்து வகை பள்ளிகளிலும் இணையவழி வகுப்புகள், இணையவழி தோ்வுகள் நடத்துவதை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை நா்சரி, பிரைமரி, மெட்ரிக்., சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் 5 நாள்களுக்கு இணையவழி வகுப்புகள், இணையவழி தோ்வுகள் நடத்தக் கூடாது. இந்த விடுமுறை தொடா்பாக பள்ளிகள் அனைத்து மாணவா்கள், பெற்றோா்களுக்கு தெரிவிக்க வேண்டும்.