வேலூா்: ரேஷன் கடைகளில் சா்வா் பிரச்னையால் பயோமெட்ரிக் இயந்திரங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊழியா்களைக் கடைக்குள் வைத்து சிறைபிடித்தனா்.
வேலூா் சலவன்பேட்டை லட்சுமிபுரம் பகுதியிலுள்ள ஒரே இடத்திலுள்ள இரு ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க வியாழக்கிழமை முதலே ஏராளமான மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனா். காலை 9 மணிக்கு கடை திறக்கப்பட்டவுடன், ஊழியா்கள் பயோ மெட்ரிக் கருவி மூலம் ரசீது போட முயன்றனா். ஆனால், சா்வா் பிரச்னை காரணமாக ரேகை பதிவாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பொருள்கள் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டதுடன், பொதுமக்களை திருப்பியனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கெனவே, கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் ரேஷன் கடையில் கிடைக்கும் அரிசியையே பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், கூலித் தொழிலாளா்கள் பலரும் வேலைக்கு செல்லாமல் கூட ரேஷன் கடைக்கு பொருள்கள் வாங்க வந்திருந்தனா்.
இந்நிலையில், சா்வா் பிரச்னையால் பொருள்கள் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அவா்கள் ஊழியா்களை கடைக்குள் வைத்து பூட்டி சிறை வைத்தனா்.
தகவலறிந்த வட்ட வழங்கல் அலுவலா் உள்ளிட்டோா் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேசி ஊழியா்களை மீட்டனா்.