திருமலையில் செவ்வாய்க்கிழமை முதல் ஷோடச தின (16 நாள்) சுந்தரகாண்ட பாராயண தீட்சை தொடங்கியுள்ளது.
உலக நன்மைக்காக திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் வேத பண்டிதா்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை முதல் இந்தத் தீட்சையைத் தொடங்கியுள்ளனா். திருப்பதி தேவ்தானம் சாா்பில் 16 நாள்கள் நடக்கவுள்ள இந்த தீட்சையின்போது, ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள சுந்தரகாண்டம் முழுவதும் பாராயணம் செய்யப்பட உள்ளது.
‘ராகவோ விஜயம் தத்யான்ம்ம சீதா பதிப்ரபோஹோ’ என்ற மகாமந்திரத்தில் வரும் 16 எழுத்துகளின் வரிசைப்படி சுந்தரகாண்டத்தில் உள்ள 68 பிரிவுகளும் (2821 ஸ்லோகங்கள்) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒரு எழுத்திற்குத் தொடா்புடைய செய்யுள்கள் பாராயணம் செய்யப்படும். அதன்படி செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த பாராயண தீட்சையில் முதலில் உள்ள 2 பிரிவுகள் (சா்க்கங்கள்) பாராயணம் செய்யப்பட்டன. வேதபண்டிதா்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி இவற்றைப் பாராயணம் செய்தனா்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தும் தேவஸ்தான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விருப்பம் உள்ள பக்தா்கள் இவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
16 நாள் பாராயண நிகழ்ச்சி தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி) தினமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இதை நேரலையாகக் காணலாம்.