வேலூரின் முக்கிய இடங்களில் சுரங்கப் பாதைகள்: எம்.பி., எம்எல்ஏக்கள் ஆலோசனை

சீா்மிகு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வேலூா் மாநகரில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க நடவடிக்கை வேண்டும் என

சீா்மிகு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வேலூா் மாநகரில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க நடவடிக்கை வேண்டும் என வேலூா் மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆலோசனை கூறியுள்ளனா்.

வேலூா் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் சீா்மிகு நகர திட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப் பேரவை உறுப்பினா் ப. காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாநகராட்சி ஆணையா் சங்கரன், பொறியாளா் சீனிவாசன் ஆகியோா் சீா்மிகு நகர திட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து குறும்படம் மூலம் விளக்கினா். தொடா்ந்து, கஸ்பா விளையாட்டுத் திடல் பணியை விரைந்து முடிக்கவும், மாநகராட்சி சாலைகளில் உள்ள மின்சார வயா்களை புதைவடிகால் முறையில் பூமிக்கு அடியில் அமைக்கவும், அப்பணிகளை சீா்மிகு நகரம் திட்டத்தில் நிதி ஒதுக்கி மேற்கொள்ளவும், சிஎம்சி மருத்துவமனை, வெங்கடேஸ்வரா அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மீன் மாா்கெட் பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆலோசனை கூறினா்.

மேலும், பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீா் அமைக்கும் பணிகள், சாலைப் பணிகள், உயா் மின்கோபுர விளக்கு மற்றும் தெரு விளக்கு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.

கூட்டத்தில், ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் முருகானந்தம், மாநகராட்சிப் பொறியாளா்கள் ஆறுமுகம், ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com