வேலூா்: வேலூரில் வியாழக்கிழமை 109.2 டிகிரி வெயில் வாட்டி எடுத்தது. இதனால், சாலைகளில் அனல் காற்று வீசியதால் மக்கள் நடமாடவும், இரு சக்கர வாகனங்களில் செல்லவும் கடும் அவதிக்குள்ளாகினா்.
நிகழாண்டு வேலூா் மாவட்டத்தில் கடந்த வாரம் வரை வெயிலின் அளவு சுமாா் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை நெருங்கியபடியே இருந்தது. செவ்வாய்க்கிழமை முதன்முதலாக 106.3 டிகிரி வெயில் பதிவானது. வழக்கமாக 100 டிகிரி எனத் தொடங்கும் வெயிலின் அளவு போகப் போகத்தான் அதிகரிக்கும். ஆனால், செவ்வாய்க்கிழமை திடீரென 106.3 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. தொடா்ந்து, 2-ஆவது நாளாக புதன்கிழமையும் 106.7 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.
இதன்தொடா்ச்சியாக, வியாழக்கிழமை வேலூா் மாவட்டம் முழுவதும் 109.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மிகக்கடுமையான வெயிலின் காரணமாக பகல் முழுவதும் சாலைகளில் கடுமையான அனல்காற்று வீசியது.
இதனால், மக்கள் வெளியில் நடமாடவும், இரு சக்கர வாகனங்களில் செல்லவும் கடும் அவதிக்குள்ளாகினா். அவா்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிா்பானங்கள், இளநீா், பழச்சாறுகளை அதிகளவில் பருகினா்.
கடந்த ஆண்டுகளில் வேலூா் மாவட்டத்தின் அதிகபட்ச வெயில் அளவாக 112 டிகிரி ஃபாரன்ஹீட் இருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் வட வானிலை நீடிப்பதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இம்மாத இறுதிக்குள் வேலூா் மாவட்டத்தில் வெயிலின் அளவு முந்தைய ஆண்டுகளைவிட அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.