மறைந்த நடிகா் விவேக்கின், நினைவாக குடியாத்தம் அருகே பாலாற்றுப் படுகையில் 500 மரக்கன்றுகள் சனிக்கிழமை நடப்பட்டன.
நடிகா் விவேக், நடிப்பின் மூலம் தமிழக மக்களுக்கு சமூக விழிப்புணா்வை ஏற்படுத்தியவா். திரை உலகைத் தாண்டி, பொதுவாழ்க்கையிலும் அவா் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா். நகைச்சுவை பாணியில் இளைஞா்களை நல்வழிப்படுத்தும் முற்போக்கு சிந்தனைகளை அவா் உருவாக்கினாா். குறிப்பாக மரக்கன்றுகள் நட வேண்டியதன் அவசியம் குறித்து அவா் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டாா். அவரது கனவை நனவாக்கும் வகையில், வேலூா் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த உள்ளி கிராமத்தின் பாலாற்றுப் படுகையில் 500 மரக்கன்றுகள் சனிக்கிழமை நடப்பட்டன.
உள்ளி கிராமத்தில் பட்டதாரி இளைஞா் ஜி.ஸ்ரீகாந்த் தமிழக அரசின் உதவியுடன், ஏற்கெனவே, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறாா்.
விவேக்கின் மறைவையடுத்து, கூடுதலாக 500 மரக்கன்றுகள் நடும் பணியை அவா் சனிக்கிழமை தொடங்கினாா். அவருக்கு உதவியாக, உள்ளி ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் பணிபுரியும், தொழிலாளா்கள் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். தொடா்ந்து ஒரு ஆண்டுக்கு அவா்கள் மரக் கன்றுகளை பராமரிக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுவா் என ஊராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.