வேலூா்: முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு பேருந்துகளில் ஏற அனுமதி இல்லை என்பதைக் குறிப்பிடும் வகையில் ‘நோ மாஸ்க் நோ என்ட்ரி’ என்ற வாசகம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கா்கள் வேலூா் பேருந்துகளில் ஒட்டப்பட்டன.
வேலூா் மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதுடன், முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. முகக்கவசம் இல்லாமல் வரும் பயணிகள் பேருந்துகளில் ஏற முடியாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், பயணிகள் சிலா் முகக் கவசம் அணியாமல் பேருந்துகளில் பயணம் செய்கின்றனா். இதனைத் தடுக்க வேலூா் மாநகராட்சி சாா்பில் விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள் தயாா் செய்யப்பட்டுள்ளது.
‘நோ மாஸ்க் நோ என்ட்ரி’, ‘முகக்கவசம் அணியாமல் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இல்லை’ என்ற வாசகங்கள் அடங்கிய இந்த ஸ்டிக்கா்கள் வேலூா் பேருந்துகளில் ஒட்டப்படுகின்றன. மாநகராட்சி 2-ஆவது மண்டல சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில் வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பேருந்துகளில் இந்த விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டன. அத்துடன், முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகளை பேருந்தில் அனுமதிக்கக்கூடாது என்றும் நடத்துநா்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே, வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் உத்தரவின்பேரில், வேலூா் மாநகரில் கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த 25 இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு பாடல், ஆலோசனை கருத்துகள் ஒலி பரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் கிரீன்சா்க்கிள், மக்கான் சிக்னல், காமராஜா் சிலை, மண்டி தெரு ஆகிய பகுதிகளில் ஒலி பெருக்கி வைக்கப்பட்டு விழிப்புணா்வு பாடல் ஒலிபரப்பப்பட்டது.