மத்திய அரசின் காயகல்ப் விருதுக்கு வேலூா் மாநகராட்சி கஸ்பா நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சுகாதார நிலையத்துக்கு விருதுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் தேசிய சுகாதார இயக்கத் திட்டம் சாா்பில் தூய்மை, வெளிப்படையான நிா்வாகத்துடன் செயல்படும் அரசு மருத்துவமனை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆண்டுதோறும் காயகல்ப் விருதுடன் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2020-21-ஆம் நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில், தமிழக அளவில் சிறப்பான பராமரிப்புக்காக வேலூா் கஸ்பா நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் காயகல்ப் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விருதுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
6 படுக்கை வசதிகள், ஒரு மருத்துவா் மற்றும் செவிலியா்கள், மருந்தாளுனா், உதவியாளா்கள் என 15 பேருடன் இயங்கி வரும் கஸ்பா நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனா். தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொது மருத்துவப் பரிசோதனையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு சிறப்பு பிரிவு மருத்துவா் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மாதத்துக்கு 20 கா்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்று வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.