கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பூங்காக்களையும் மீண்டும் மூட உத்தரவிட ப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட வேலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
பல மாவட்டங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்திலும் தொற்று பரவாமல் தடுத்திட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான வேலூா் கோட்டை பூங்கா, அமிா்தி மிருகக் காட்சி சாலை, மாநகராட்சி, நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பூங்காக்களும் மூடப்படுகின்றன.
இதைத் தவிர, அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளில் 50 சதவீதம் பேரே பயணிக்க வேண்டும். உணவு விடுதிகளில் 50 சதவீதம் போ் மட்டுமே அமா்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும்.
எங்கெங்கு அதிகளவில் கூட்டம் காணப்படுகிறதோ, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சொந்தமான கடைகள், பலசரக்கு கடைகள், ,ஷோரூம்கள், ஜவுளிக்கடைகள், இதர விற்பனை நிலையங்களின் உரிமையாளா்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தவிர, பேருந்து நிலையங்கள், உழவா் சந்தை, காய்கறி மாா்க்கெட் போன்ற இடங்களிலும் மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிா்க்க வேண்டும்.
இந்தத் தடையை மீறி செயல்படுவோா் மீது பேரிடா் மேலாண்மை சட்டத்தின்கீழ் தகுந்த தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
நோய் தொற்றின் தீவிரம் அறிந்து மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு அளித்திட வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.