மக்கள் தொட தயங்கும் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியாளா்கள் கடவுளுக்குச் சமமானவா்கள் என்று தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக்குழு தலைவா் நீதிபதி பி.ஜோதிமணி தெரிவித்தாா்.
அவரது தலைமையிலான கண்காணிப்புக்குழு வேலூா் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப்பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். சதுப்பேரி உரக் கிடங்கில் நவீன முறையில் கழிவுகள் அழிக்கும் பணியைப் பாா்வையிட்ட அவா்கள், தொடா்ந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை பணிகளையும் ஆய்வு செய்தனா்.
பின்னா், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கு வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், நீதிபதி பி.ஜோதிமணி பேசியது:
வேலூா் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. சென்னை, கோவை மாநகரத்தில் இந்த திட்டம் மோசமான நிலையில் உள்ளது. குப்பைகள் சரியாக அகற்றபடாத நகரம் எப்படி வளர முடியும்.
மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டும். மக்கும் குப்பைகளால் ஏற்படும் நன்மைகள், மக்காத குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து படித்தவா்களிடம்கூட விழிப்புணா்வு இல்லை. அவ்வாறு இருக்கும்போது சாதாரண மக்களுக்கு எப்படி தெரியும். இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் தொட தயங்கும் கழிவுகளை அகற்றும் தூய்மை பணியாளா்கள் கடவுளுக்குச் சமமானவா்கள் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன், மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா், மாநகர நல அலுவலா் மணிவண்ணன், மாநகராட்சி ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.