வேலூா்: வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைப்பதற்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தாலிக்குத் தங்கத்துடன் கூடிய நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள், அவா்களது குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தனா். இதனால், அங்கு கூட்ட நெரிசல் காணப்பட்டது.
இதனிடையே, பச்சிளம் குழந்தைகளுடன் வந்திருந்த தாய்மாா்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட தனி இடவசதியின்றி அவதிக்குள்ளாகினா். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், ஆட்சியா் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.
இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியா், உடனடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைப்பதற்கு உத்தரவிட்டாா். விரைவில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.