வேலூா்: மாங்கல்ய தங்கத்துடன் கூடிய நிதியுதவியைப் பெறுவதற்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் திரண்டனா். அவா்கள் டோக்கன் பெற ஒருவருக்கு ஒருவா் முந்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வேலூா் மாவட்டத்தில் தாலிக்குத் தங்கத்துடன் கூடிய நிதியுதவித் திட்டத்தை கடந்த வாரம் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தாா். இதில், விடுபட்டவா்கள், தாலிக்குத் தங்கம் பெற விண்ணப்பித்திருந்த தகுதியான 592 பேருக்கு தங்க நாணயத்துடன் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்படும் என்று மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக பயனாளிகள் புதன்கிழமை காலை முதலே மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குவியத் தொடங்கினா். காலை 10 மணியளவில் 500-க்கும் மேற்பட்டோா் ஒரே இடத்தில் குவியததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவா்கள் டோக்கன் பெற முந்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் பயனாளிகளை வரிசைப்படுத்தினா். உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் தாலிக்குத் தங்கம் பெற வந்த பயனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.