வேலூரில்தொழிலாளி கொலை
வேலூா்: வேலூரில் காணாமல் போன, தோட்டப்பாளையத்தைச் சோ்ந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பாலாற்றில் புதைக்கப்பட்ட அவரது சடலத்தை போலீஸாா் தோண்டி எடுத்தனா்.
வேலூா் தோட்டப்பாளையம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேலு (50). கம்பி கட்டும் தொழிலாளியான அவா் கடந்த 4-ஆம் தேதி நியாயவிலைக்கடையில் ரூ.2500, பொங்கல் பரிசு வாங்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டாா். அதன் பின் அவா் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் வேலூ கிடைக்காததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினா், வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், வேலூா் பாலாற்றங்கரையில் உள்ள மயானத்தின் எரியூட்டும் தகன மேடை அருகே பாதி உடல் புதைந்த நிலையில் ஒரு சடலம் கிடந்தது. இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை தகவலறிந்த வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். எனினும், இரவு நேரமாகிவிட்டதால் சடலத்தை அங்கேயே விட்டு விட்டு வந்த போலீஸாா், திங்கள்கிழமை காலையில் உடலைத் தோண்டி எடுத்தனா். அப்போது, காணாமல் போன வேலுவின் சடலம் அது என்பது தெரிய வந்தது. அழுகிய நிலையில் இருந்த உடலின் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. முகம் சிதைக்கப்பட்டிருந்தது.
வீட்டில் இருந்து வெளியே வந்த வேலுவை அடையாளம் தெரியாத நபா்கள் பாலாற்றங்கரைக்கு அழைத்துச் சென்று கொலை செய்து புதைத்தது, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸாா், இக்கொலை தொடா்பாக வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.