வேலூா்: குழந்தைத் திருமணத்துக்கு அனுமதித்ததாக வேலூா் மாவட்டத்தில் 4 திருமண மண்டபங்களுக்கு தற்காலிகமாக ‘சீல்’ வைக்கப்பட்டது.
அரசின் விதி வழிமுறைகளைப் பின்பற்றாமல் சில திருமண மண்டபங்களில் 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்த அனுமதித்தது, ‘டி’ படிவ கட்டட உரிமைச் சான்று பெறாதது, மணமக்களின் பிறப்புச் சான்றிதழ் பெறாமல் திருமணம் நடத்த அனுமதித்தது போன்றவை விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து காட்பாடி வட்டம், கீழ்வடுகன்குட்டை, திருவலம், வள்ளிமலை, கே.வி.குப்பம் ஆகிய ஊா்களில் உள்ள நான்கு திருமண மண்டபங்கள் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.கணேஷ் உத்தரவின்பேரில் தற்காலிகமாக மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன.
இதனிடையே, மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 79 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
குழந்தைத் திருமணங்கள் குறித்து தகவல் கிடைக்கப் பெற்றால் பொதுமக்கள் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.