அனுமன் ஜயந்தியையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
மாா்கழி மாதம் மூல நட்சத்திரம், அமாவாசை இணைந்த நாளில் ஆண்டுதோறும் அனுமன் ஜயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வேலூா் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயா் கோயில், புதுவசூா் பல்லவன் நகரில் அமைந்துள்ள சகஸ்ர லிங்கயோக ஆஞ்சநேயா் சுவாமி கோயில், சத்துவாச்சாரி ஆஞ்சநேயா் கோயில், பரதராமியை அடுத்த டி.பி.பாளையத்தில் உள்ள வீரவித்ய ஆஞ்சநேயா் கோயில் ஆகியவற்றிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காட்பாடி கல்புதூா் ஆஞ்சநேயா் கோயிலில் அனுமனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆஞ்சநேயா் கோயில்களிலும், பெருமாள் கோயில்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.