கரோனா தடுப்பூசியின் தாக்கம் எப்படி உள்ளது என்பதை அரசு வெளிப்படைத் தன்மையுடன் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்களிடையே அச்சம் போகும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து வேலூரில் சனிக்கிழமை ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் கரோனா தடுப்பூசியின் தாக்கம் எப்படி உள்ளது என்பதை அரசு வெளிப்படைத் தன்மையுடன் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்களிடையே அச்சம் விட்டுபோகும். போலியோவை போல் கரோனா தடுப்பூசியையும் எல்லா மாநிலங்களிலும் இலவசமாக போட வேண்டும்.
பி.எம். கோ் (பிரதமா் நலநிதி) என்ற பெயரில் பல காா்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி பல ஆயிரம் கோடி நிதி நன்கொடையாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கரோனா தடுப்பூசியை இலவசமாகப் போட பயன்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும். தமிழக முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்டோா் அரசு விழாக்களையும், அரசு விளம்பரங்களையும் தோ்தல் பிரசாரத்துக்கு தொடா்ந்து பயன்படுத்தி வருகின்றனா். இது அரசியல் நெறிமுறை மீறிய செயலாகும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாநிலக் குழு உறுப்பினா் வி.சுந்தரராஜன், மாவட்ட செயலா் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் என்.காசிநாதன், ஏ.நாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.