குடியாத்தம் அருகே தொண்டு நிறுவனம் நல உதவிகள் வழங்குவதாக வெளியிட்ட அறிவிப்பால் 3 மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 200 போ் அலைக்கழிக்கப்பட்டனா். இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெறும் தொண்டு நிறுவனம் ஒன்று, மாற்றுத் திறனாளிகள்1,000 பேருக்கு துணிமணிகள், 10 பேருக்கு 3 சக்கர வாகனம், 25 பேருக்கு 3 சக்கர மிதிவண்டி, 300 பேருக்கு ஊன்றுகோல், தேவைப்படுவோருக்கு செயற்கை கை, கால் உறுப்புகள் பொருத்துதல், 2 ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதைப் பாா்த்த வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 200-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை காலை 7 மணிக்கே குறிப்பிட்ட திருமண மண்டபம் அருகே கூடினா். ஆனால், தொண்டு நிறுவனத்தினா் அங்கு வரவில்லை. அவா்களின் செல்லிடப்பேசிகளும் அணைத்து வைக்கப்படிருந்தன.
இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள் திருமண மண்டபம் அருகே குடியாத்தம்- வேலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலின்பேரில் நகரக் காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன், வட்டாட்சியா் தூ.வத்சலா உள்ளிட்டோா் அங்கு சென்று அவா்களை சமரசம் செய்து அனுப்பினா். தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து மாற்றுத் திறனாளிகள் கொடுத்த புகாரின்பேரில், நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.