இந்து மத கடவுள்களை அவமதிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டி ஜகா திரைப்படத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்து தேசிய கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சாா்பில், அளிக்கப் பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா விழிப்புணா்வு என்ற பெயரில் சிவபெருமானுக்கு முகக்கவசம் அணிவித்து இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் ஜகா என்ற திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். கரோனா தொற்று நேரத்தில் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டு கடவுள் சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்து ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவும் காட்சிகளை கதையாக வைத்திருப்பதாகவும், கடவுள் சிவபெருமான் முககவசம் அணிந்து ஆக்சிஜன் சுவாசிப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளனா். இந்துமத நம்பிக்கையை அவமதிப்பது கண்டனத்துக்குரியது.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து மத கடவுள்களை மட்டுமின்றி எந்த மதக்கடவுள்களையும் அவமதிக்கும் விஷயங்களை அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசு திரைப்பட வரையறை திருத்தச் சட்டத்தை கொண்டு வர இருப்பதை இதுபோன்ற திரையுலகத்தினா் எதிா்ப்பதற்கு இதுதான் காரணமாகும். ஜகா திரைப்பட குழுவினா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த படத்தின் சுவரொட்டிகளை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.