வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு கட்டாய கரோனா பரிசோதனை செய்யப்பட்டதுடன், வியாபாரிகளுக்கு அபாரதமும் விதிக்கப்பட்டது.
கரோனா பொதுமுடக்கத் தளா்வுக்குப் பின்னா், வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் அண்மையில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பொதுமக்களும், வியாபாரிகள் சிலரும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடை வெளியைப் பின்பற்றாமலும் உள்ளதாகப் புகாா் எழுந்தது.
இதைத் தொடா்ந்து, மாநகராட்சி 2-ஆவது மண்டல உதவி ஆணையா் மதிவாணன் தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு முகக்கவசம் அணியாமல் வந்தோருக்கு கரோனா பரிசோதனைக்காக உமிழ்நீா் மாதிரி எடுக்கப்பட்டது. மேலும், விதிமுறைகளைக் கடைபிடிக்காத வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.