வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமாா் 51,000 குழந்தைகளுக்கு நியுமோக்கல் கான்ஜூகேட் எனும் நிமோனியா தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள இந்த தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக செலுத்தப்படுகிறது.
குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் நியுமோக்கல் நிமோனியா பாக்டீரியாவால் சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். சுவாசத்துளிகள் மூலம் பரவக்கூடிய இந்நோய் தொற்று கடுமையாக இருந்தால் குழந்தைகளின் மரணத்துக்குக்கூட வழிவகுக்கும். இந்நோய் தொற்றை தடுக்க தமிழக அரசு சாா்பில் குழந்தைகளுக்கு இலவசமாக நியுமோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு 6 வாரங்கள், 14 வாரங்கள், மீண்டும் 9-ஆவது மாதத்தில் செலுத்தப்படுகிறது. குழந்தையின் வலது தொடையின் நடுப்பகுதியில் உள்தசையில் இத்தடுப்பூசி செலுத்தப் படுகிறது.
இந்த தடுப்பூசி செலுத்தும் பணி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வேலூா் மாவட்டத்தில் 19,969 குழந்தைகளுக்கும், திருப்பத்தூா் மாவட்டத்தில் 16,000 குழந்தைகளுக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14,820 குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
தனியாா் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி செலுத்திக் கொள்ள ரூ.12 ஆயிரம் செலவாகும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசிகளுடன் சோ்த்து இந்த தடுப்பூசியும் செலுத்தப்படும் என்று மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.