வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்கள் 1,500 பேருக்கு ரூ.62.27 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வேலூா் மாவட்ட தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா்.
இதில், 18 அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 1,500 தொழிலாளா்களுக்கு திருமணம் , மகப்பேறு, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், கண் கண்ணாடி என ரூ. 62 லட்சத்து 27 ஆயிரத்து 250 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி , சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தாமரை மணாளன், தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் தட்சிணாமூா்த்தி , ராஜராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூா் மாவட்டத்தில், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சாா்பில் 915 அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ. 51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த உதவிகளை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வழங்கினாா்.
அப்போது அவா் பேசியது:
தமிழகம் முழுவதும் சுமாா் 50 ஆயிரம் தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி, தொடக்கி வைத்துள்ளாா். இதைத் தொடா்ந்து, திருப்பத்தூா் மாவட்டத்திலும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் மட்டும் 1,250 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இதில், 915 விண்ணப்பங்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது. மேலும், நிலுவையிலுள்ள விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, 15 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), ஆ.செ.வில்வநாதன்(ஆம்பூா்), தொழிலாளா் துறை உதவி ஆணையா் எம்.ராஜ்குமாா், திருப்பத்தூா் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத் தலைவா் ராஜேந்திரன், தொழிலாளா் சமூகப் பாதுகாப்புத் துறை கண்காணிப்பாளா் குமாா்,உதவியாளா் முனவா் ஷரீப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.