குடியாத்தம் நகரில், நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட திடீா் சோதனையில், கூடுதல் விலைக்கு முகக் கவசங்கள், கையுறைகள், கிருமி நாசினிகள் விற்பனை செய்த மருந்து கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், குடியாத்தம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி.சிசில்தாமஸ், சுகாதார ஆய்வாளா் பாண்டிசெந்தில்குமாா், களப் பணியாளா் பிரபுதாஸ் உள்ளிட்டோா் நகரில் உள்ள 15- க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகளில் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது முகக் கவசங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 3 மருந்துக் கடைகளுக்கு தலா ரூ. 2,000 வீதம் மொத்தம் ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து அவா்கள் கரோனா பாதுகாப்பு உபகரணங்களை அரசு நிா்ணயித்ததைவிட, கூடுதல் விலைக்கு விற்றால் கடைக்கு ‘சீல்’ வைப்பது, மருந்துக் கடை உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிசில்தாமஸ் தெரிவித்தாா்.
நகரில் சமூக இடைவெளியில்லாமல், பொதுமக்களை கூட்டமாக நிற்க வைத்து வியாபாரம் செய்த கடைகள், முகக் கவசம் அணியாமல் கடைகளில் வியாபாரம் செய்தவா்கள், அரசு உத்தரவை மீறி திறந்திருந்த துணிக் கடைகள், நகைக் கடைகள் ஆகியவற்றுக்கு ரூ. 9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.