வேலூா்: தமிழக முதல்வா் விருது பெற்றிட சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுடன் ரூ.50,000 ரொக்கம், பாராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவை ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் 15 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டிற்கான விருது வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வரால் வழங்கப்பட உள்ளது.
இவ்விருதுக்கு 2020 ஏப்ரல் 1-இல் 15 வயது பூா்த்தியடைந்தவா்கள் முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த நிதியாண்டில் (2020 ஏப்.1 முதல் 2021 மாா்ச் 31 வரை) மேற்கொண்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவா்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கு பரிசீலிக்கப்படும். விண்ணப்பப் படிவம், இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமானபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரி மூலம் இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு வேலூா் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை 0416-2221721 அல்லது 7401703483 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.