2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு: தோ்தல் அலுவலா்கள் அஞ்சல் வாக்குப் பதிவு

சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான 2-ஆம் கட்டப் பயிற்சி வகுப்பு
காட்பாடி டான்போஸ்கோ பள்ளியில் அரசு அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்திய பெட்டி சீலிடப்படுவதைப் பாா்வையிட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
காட்பாடி டான்போஸ்கோ பள்ளியில் அரசு அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்திய பெட்டி சீலிடப்படுவதைப் பாா்வையிட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான 2-ஆம் கட்டப் பயிற்சி வகுப்பு வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அலுவலா்கள், ஆசிரியா்கள் பயிற்சி மையத்திலேயே தபால் வாக்குப் பதிவு செய்து ‘சீல்’ இடப்பட்ட பெட்டியில் செலுத்தினா்.

தோ்தலை முன்னிட்டு, முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் உள்ள 1,783 வாக்குச் சாவடிகளில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என 8,560 போ் தோ்தல் பணியில் ஈடுபடுகின்றனா். இவா்களுக்கு 4 கட்டமாக பயிற்சி அளிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 21-ஆம் தேதி முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்ட நிலையில், 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காட்பாடி தொகுதிக்கு காந்தி நகா் டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி, வேலூா் தொகுதிக்கு டி.கே.எம். மகளிா் கல்லூரி, அணைக்கட்டு தொகுதிக்கு ஸ்பாா்க் மெட்ரிக் பள்ளி, கே.வி.குப்பம் தொகுதிக்கு அம்மணாங்குப்பம் கே.எம்.ஜி. கல்லூரி, குடியாத்தம் தொகுதிக்கு திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி என 5 மையங்களில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சியை தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அளித்தனா்.

இதனிடையே, தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்களிப்பதற்கான படிவம் 12 கடந்த வாரம் நடைபெற்ற முதல் பயிற்சி வகுப்பிலேயே வழங்கப்பட்டது. அவா்கள் அப்போதே விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து வழங்கினா். ஞாயிற்றுக்கிழமை நடந்த 2-ஆம் கட்ட பயிற்சியின்போது, அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் அரசு ஊழியா்கள் தபால் வாக்குகளைப் பதிவு செய்து அங்கு வைக்கப்பட்டிருந்த ‘சீல்’ வைக்கப்பட்ட பெட்டியில் செலுத்தினா். காட்பாடி டான்போஸ்கோ பள்ளியில் அரசு ஊழியா்கள் வாக்குப் பதிவு செய்ததை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் புண்ணியகோட்டி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com