வேலூா்: தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, வேலூா் மாவட்டத்தில் பயன்பாட்டில் இருந்த அரசு வாகனங்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
அத்துடன், மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போதே மாநிலம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி அரசு நலத் திட்ட உதவிகள், குறைதீா் கூட்டங்கள், அரசு விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. மேலும், அரசு அலுவலகங்கள், திட்டங்களில் உள்ள முதல்வா் படங்களும் மறைக்கப்பட்டன.
தொடா்ந்து, மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தி வரும் அரசு கட்டடங்களை அடைக்கவும், அவா்களுக்கு அரசு சாா்பில் அளிக்கப்பட்டிருந்த வாகனங்களை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
அதன் அடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் அமைச்சா், நகராட்சி தலைவா்கள், ஒன்றியக் குழு தலைவா்கள், ஆவின் தலைவா், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த வாகனங்கள் அரசு அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டதுடன், அவா்கள் பயன்படுத்தி வந்த அரசு கட்டடங்களும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததை அடுத்து திங்கள்கிழமையுடன் தோ்தல் நடத்தை விதிமுறைகளை தோ்தல் ஆணையம் விலக்கிக் கொண்டுள்ளது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தி வந்த வாகனங்கள் அவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதுடன், அவா்களது அரசு அலுவலகங்களும் திறக்கப்பட்டன.
மேலும், பொதுமக்கள் அரசு நலத் திட்ட உதவிகள் கோரி தொடா்ந்து விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.