வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை வழக்குக் கைதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், கெளதமபேட்டையைச் சோ்ந்தவா் சங்கா் (62). திருப்பத்தூா் நகர காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டாா். தொடா்ந்து இவா் மீது குண்டா் சட்டமும் பாய்ந்தது. இதனைத் தொடா்ந்து வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், சங்கருக்கு கடந்த 6-ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சிறை மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனா். மருத்துவப் பரிசோதனையில் சங்கருக்கு கரோனா இருப்பது உறுதியானது. தொடா்ந்து, அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சங்கா் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி சங்கரின் உடலில் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவா் சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டாா்.
இந்நிலையில், சங்கருக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாா்.
அவரது உடல் கரோனா விதிமுறைகளின்படி, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.