வேலூா் மாவட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்ட 3,692 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் தமிழக அரசின் கரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ. 2,000 திங்கள்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைத்திடவும், பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடவும் தமிழக அரசின் கரோனா நிவாரண நிதி முதல் தவணையாக தலா ரூ.2,000 வீதம் வேலூா் மாவட்டத்திலுள்ள 4,23,507 அரிசி குடும்ப அட்டைகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதில் தற்போது வரை 97.99 சதவீத குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு விட்டது.
புதிதாக வழங்கப்பட்ட குடும்ப அட்டைகளுக்கும் இந்த நிவாரண நிதியுதவி அளித்திட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்று தமிழக முதல்வா், புதிதாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தாா். அதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் புதிதாக வழங்கப்பட்டுள்ள 3,692 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் திங்கள்கிழமை முதல் கரோனா நிவாரண நிதி தலா ரூ.2000 வழங்கப்பட உள்ளது. புதிய குடும்பஅட்டைதாரா்கள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று இந்த நிவாரண நிதியை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் தெரிவித்துள்ளாா்.