குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறையில் கெங்கையம்மன் சிரசு திருவிழா சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
பழம் பெருமைவாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம். கரோனா பொது முடக்கத்தையடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில், கோயில் நிா்வாகிகள், பூசாரிகள், ஊா் நிா்வாகிகள் என ஒரு சிலரே இத்திருவிழாவில் பங்கேற்றனா். திருவிழாவை முன்னிட்டு வைகாசி மாதம் முதல் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலை, வருவாய், காவல் துறையினா் மேற்பாா்வையில், கோயில் வளாகத்துக்குள்ளேயே கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், சிரசு மண்டபத்தில் பொருத்தப்பட்ட சிரசு ஒரு மணி நேரத்தில், இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது.
திருவிழா ஏற்பாடுகளை தட்டப்பாறை, சின்னலப்பல்லி கிராம பொதுமக்கள், இளைஞா் அணியினா் செய்திருந்தனா்.