சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 1,400 ஆக்சிஜன் காலி சிலிண்டா்களில் வேலூா் மாவட்டத்துக்கு 75 சிலிண்டா்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் சனிக்கிழமை பெற்று அரசு மருத்துவமனைகளின் தேவைகளுக்கு அளித்தாா்.
கரோனா பரவல் 2-ஆவது அலை மாநிலத்தில் ஆக்சிஜன், அதன் தொடா்புடைய சாதனங்களுக்கு பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றின் அவசரத் தன்மை, தவிா்க்கமுடியாத தேவையைக் கருதி தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) சாா்பில் போதிய அளவு ஆக்சிஜன் சாதனங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, சிப்காட் நிறுவனம் சாா்பில் சிங்கப்பூரில் இருந்து ராணிப்பேட்டை சிப்காட் நிறுவனத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 1,400 ஆக்சிஜன் சிலிண்டா்கள், ரெகுலேட்டா் கருவிகள் மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேலூா் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன் நிரப்பப் படாத 75 காலி சிலிண்டா்களை சிப்காட் உதவியாளா் ரங்கநாதன், வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபனிடம் ஒப்படைத்தாா். தொடா்ந்து, அவை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் பயன்பாட்டுக்காக சுகாதாரத்துறை துணை இயக்குநா் மணிவண்ணன் வசம் ஒப்படைக்கப்பட்டது..
அப்போது, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.